Archives: ஜூலை 2024

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

டோனாவூரில் அன்பு

"அம்மா" என்பது தாய்க்கான தமிழ் வார்த்தையாகும், இது எமி கார்மைக்கேலின் கல்லறையின் இடத்தில் உள்ள பறவைகளுக்கான குளத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் டோனாவூரில் உள்ள அவரது மிஷன் பள்ளி, தேவதாசிகளாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு ஒரு புகலிடமாக மாறியது. அவரது ஆரம்ப ஆண்டுகளில் பல இரவுகளில், எங்காவது ஒரு சிறுமியைக் காப்பாற்றுவதற்காக, சேலை உடுத்திக்கொண்டு சைக்கிளில் செல்வார் என்று கூறப்படுகிறது. 1931 இல் கீழே மோசமாக விழுந்ததைத் தொடர்ந்து அவர் படுத்த படுக்கையான பிறகும், மற்றவர்கள் மூலம் இந்தக் குழந்தைகளை மீட்பதைத் தொடர்ந்தார். அவர் பல கடிதங்கள் மற்றும் புத்தகங்களை எழுதினார், அவை சேவையைத் தொடரவும், பள்ளிக்கு நிதி பெறவும் உதவின. குழந்தைகளை எமியிடம் ஈர்த்தது எது என்று கேட்டபோது, அவர்கள் “அன்புதான். அம்மா எங்களை நேசித்தார்" என்றார்கள்.

சில சமயங்களில் அன்புதான் சகல நற்பண்புகளுக்கும் தாய் என்பதை நினைவூட்டிக்கொள்ள வேண்டும். உண்மையான அன்பை கிறிஸ்துவில் அனுபவிக்க முடியும், ஏனென்றால் அவர் அன்பின் மனு உருவம் (வ.8). கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, நமக்கு உண்மையான அன்பின் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது. இயேசுவின் அன்பு நிபந்தனைக்குட்பட்டது அல்ல. அவர் தகுதியற்றவர்களையும் நேசித்தார் (வ.11). தேவன் நம்மை நேசிக்கும் விதத்தில் நாம் அன்பைப் பார்க்கும்போது, அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றிய நமது கண்ணோட்டத்தை அது மாற்றுகிறது. இயேசுவைப் போல நாம் நேசிக்காதவரை, தேவனை உண்மையாக அறிய முடியாது என்பதை உணர உதவுகிறது (வ.7-8). பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் தேவசாயலில் படைக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27) மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பு தேவை. தேவபிள்ளைகளாகிய நாம், உண்மையான, கறைபடியாத அன்பின் அர்த்தத்தை, அன்பிற்காகப் பசியால் வாடுபவர்களுக்குக் காட்டத் தகுதியான இடத்தில் இருக்கிறோம். டோனாவூா் அடிமைப் பெண்களின் அன்பின் திருவுருவமாக மாறிய எமியைப் போல நாமும் நம் ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும், கிரியையிலும் இயேசுவின் உண்மையான அன்பை உருப்படுத்துவோம். 

 

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப் பலர் கருதுகின்றனர்.

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக. 

 

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.